Tuesday, September 28, 2010

அயோத்தி சர்ச்சை தீர்ப்பு தடை நீக்கம்: சுப்ரீம் கோர்ட்டில் மனு நிராகரிப்பு ; விரைவில் தீர்ப்பு



புதுடில்லி: 
                     60 ஆண்டுகாலமாக நிலுவையில் இருக்கும் அயோத்தி சர்ச்சை தீர்ப்பு தொடர்பான தடை கோரிய மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று தள்ளுபடி செய்யப்பட்டது. கடந்த 24 ம் தேதி அலகாபாத் ஐகோர்ட் இந்த விவகாரத்தில் தீர்ப்பளிக்க இருந்தது. இந்நேரத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கும் என காரணம் காட்டி ரமேஷ் சந்த் திரிபாதி சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் தடை உத்தரவு வழங்கினர். இந்த தடை ஒருவார காலம் அமலில் இருக்கும் என கடந்த 23 ம் தேதி சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்தது.
இது தொடர்பாக விளக்கம் கேட்டு நீதிபதிகள் , வழக்கில் சம்பந்தப்பட்டவர்களுக்கும், மத்திய அரசு அட்டர்னி ஜெனரலுக்கும் நோட்டீஸ் அனுப்பினர். இதனால் அயோத்தி தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த மனு விசாரணையை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி எஸ் எச். கப்பாடியா தலைமையிலான நீதிபதிகள் அப்தாப் ஆலம், ராதாகிருஷ்ணன் ஆகிய 3 பேரை கொண்ட பெஞ்ச் விசாரிக்கும் என கோர்ட் அறிவித்தது. இதன்படி தடை தொடர்பான மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வாதம் எடுத்து வைக்கப்பட்டது.

தொடர்ந்து சம்பந்தப்பட்ட வக்கீல்கள் தங்கள் வாதங்களை எடுத்து வைத்தனர். மனுதாரர் வக்கீல் நாட்டில் யாரும் அயோத்தி தீர்ப்பு வெளிவர விருப்பம் காட்டவில்லை.,சட்டம் ஒழுங்கு கடுமையாக பாதிக்கப்படும். செட்டில்மென்ட் ஆகும் வகைக்கு சுப்ரீம்கோர்ட் காலஅவகாசம் கொடுக்க வேண்டும். என வாதிட்டார். காமன்வெல்த்போட்டி , ஒபாமா வருகை குறித்தும் கோர்ட்டில் எடுத்து கூறப்பட்டது. அரசு தரப்பில் ஆஜரான அட்டர்ஜி ஜெனரல் தனது வாதத்தில் காலம் தாழ்த்தாத எந்த ஒரு நல்ல முடிவு ஏற்பட்டாலும் நாங்கள் வரவேற்கிறோம் என்றார். இதனையடுத்து இன்று மதியம் 2  மணிக்கு உத்தரவு அறிவிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர். இதன்படி மதியம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தடை கோரிய மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்வதாக அறிவித்தனர். அலகாபாத் கோர்ட் என்று வேண்டுமானாலும் தீர்ப்பளிக்கலாம் என்றனர்.

தீர்ப்பு தடை விலக்கல் : 
                                                    காங்., பாஜ., வரவேற்பு:  சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவுக்கு காங்., பா.ஜ., வினர் வரவேற்பு அளித்துள்ளனர். விரைவான தீர்ப்பை எதிர்பார்க்கிறோம் என பா.ஜ., செய்தி தொடர்பாளர் ரவிஷங்கர் பிரசாத் கூறினார்.


அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான வழக்கின் தீர்ப்பை, அலகாபாத் ஐகோர்ட்டின் லக்னோ பெஞ்ச் கடந்த வெள்ளிக் கிழமை வெளியிடுவதாக இருந்தது. இந்நிலையில், ஓய்வு பெற்ற அதிகாரியான ரமேஷ் சந்த் திரிபாதி என்பவர், "சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கின் தீர்ப்பை ஒத்திவைக்க வேண்டும்' எனக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனு விசாரணைக்கு வந்த போது, அதை உடனே விசாரிக்க மறுத்த நீதிபதிகள், அதை மற்றொரு பெஞ்சின் விசாரணைக்கு பட்டியலிடும்படி, சுப்ரீம் கோர்ட் பதிவாளருக்கு உத்தரவிட்டனர்.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கின் தீர்ப்பை அலகாபாத் ஐகோர்ட் வெளியிட, ஒரு வார காலம் இடைக்கால தடை விதிக்கப்பட்டது. அத்துடன் தீர்ப்பை ஒத்திவைக்கக் கோரி திரிபாதி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை 28ம் தேதிக்கு(இன்று) தள்ளிவைக்கப்பட்டது. மேலும், அயோத்தி வழக்கில் தொடர்புடையவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிடப்பட்டது.

பிரணாப் முகர்ஜி வேண்டுகோள் : இதற்கிடையில், மேற்கு வங்கத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்ற மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம், அயோத்தி விவகாரம் குறித்து நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர் பதிலளிக்கையில், "அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்பது குறித்து இரு தரப்பினரும் வழக்கு தொடுத்துள்ளனர். அவர்கள், தங்களுக்கிடையில் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னையைத் தீர்க்க முன்வர வேண்டும். அது சாத்தியமாகாத பட்சத்தில், கோர்ட் தீர்ப்பு ஒப்புக் கொள்ளப்பட வேண்டும்' என்று யோசனை தெரிவித்தார். காங்., கட்சி இக்கருத்தைத்தான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மேலும், இன்றைய விசாரணைக்காக பதில் மனுக்களை சன்னி மத்திய வக்ப் வாரியமும், அகில பாரத இந்து மகாசபாவும் தனித்தனியாக தாக்கல் செய்துள்ளன.இந்த இரு அமைப்புகளுமே, அயோத்தி விவகாரம் தொடர்பாக அலகாபாத் ஐகோர்ட் இன்னும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக தீர்ப்பை வழங்க வேண்டும். இதற்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட வேண்டும் என கோரியுள்ளன.

தீர்ப்பை தள்ளி வைக்க எதிர்ப்பு : 
                                                                       சன்னி மத்திய வக்ப் வாரியம் தாக்கல் செய்துள்ள மனுவில், "60 ஆண்டு காலமாக நடக்கும் சர்ச்சையில், கோர்ட்டிற்கு வெளியே பிரச்னையை தீர்த்து கொள்வது என்பது முடியாத காரியம். 19 ஆண்டுகளாக ஐகோர்ட்டில் நடந்து வரும் விசாரணையில், வழக்கு போட்டுள்ள திரிபாதி பங்கேற்கவில்லை. மேலும், இறுதி தீர்ப்புக்காக 90 நாட்கள் நடந்த இறுதி விசாரணையிலும் திரிபாதியோ அவரது சார்பில் வக்கீலோ பங்கேற்கவில்லை. எனவே இதை சீரியசாக எடுத்து கொள்ள வேண்டாம்' என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மற்றொரு மனுதாரரும் 89 வயதான முகமது ஹசிம் தாக்கல் செய்த மனுவில், "திரிபாதியின் மனுவை டிஸ்மிஸ் செய்து, அலகாபாத் ஐகோர்ட் உடனடியாக தீர்ப்பு வழங்கும் வகையில், இடைக்கால தடையை ரத்து செய்ய வேண்டும் என' கேட்டுக் கொண்டுள்ளார். மற்றொரு முக்கிய மனுதாரரான நிர்மோகி அகாரா, தன் மனுவில், "தீர்ப்பு வழங்குவதை மூன்று மாதத்திற்கு தள்ளிவைத்து, பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கு சுப்ரீம் கோர்ட் வழி வகுக்க வேண்டும்' என கோரியுள்ளார்.

முக்கிய மனுதாரரான, அகில பாரத இந்து மகாசபா தாக்கல் செய்த மனுவில், "இப்போதுள்ள சூழ்நிலையில் சுமுகமான தீர்வு என்பது இயலாத காரியம். கோர்ட் தீர்ப்பு மூலம் தான் முடிவு காண வேண்டும்' என குறிப்பிடப்பட்டுள்ளது. இரு தரப்பில் இருந்தும் பதில் மனு தாக்கல் செய்துள்ள அனைவரும் ஒரு கருத்தை உறுதிப்பட தெரிவித்துள்ளனர். வழக்கை விசாரிக்கும் அலகாபாத் ஐகோர்ட்டின் மூன்று உறுப்பினர் பெஞ்சில் இடம் பெற்றுள்ள நீதிபதிகளில் ஒருவர், அக்டோபர் 1ம் தேதி ஓய்வு பெறுகிறார். எனவே, தீர்ப்பு அதற்கு முன்பாக வெளிவர வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.  வரும் 30 ம் தேதி மாலை 3. 30க்கு இந்த வழக்கில் இறுதி தீர்ப்பு வெளி்யாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment