Wednesday, January 26, 2011

முல்லை பெரியாறில் புதிய அணை : மத்திய சுற்றுச்சூழல் குழு ஆய்வு

                     திருவனந்தபுரம் :
                                       ""முல்லை பெரியாறில் புதிய அணை கட்டுவதற்காக, புலிகள் சரணாலய வனப்பகுதியை அளிப்பது குறித்து, மத்திய அரசு நியமிக்க உள்ள மூன்று பேர் கொண்ட சுற்றுச்சூழல் குழு ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்,'' என, தேசிய புலிகள் சரணாலய கழக உறுப்பினர் டாக்டர் ராஜேஷ் கோபால் தெரிவித்தார்.
                சபரிமலை அருகே புல்மேடு பகுதியில், 14ம் தேதி ஏற்பட்ட துயர சம்பவத்தை தொடர்ந்து, அப்பகுதியை தேசிய புலிகள் சரணாலய கழக உறுப்பினர் டாக்டர் ராஜேஷ் கோபால் பார்வையிட்டார். பிறகு அவர், முல்லை பெரியாறு பகுதியில் கேரள அரசு கட்ட திட்டமிட்டுள்ள புதிய அணை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
                   நேற்று, நிருபர்களிடம் அவர் கூறியதாவது: முல்லை பெரியாறில் கேரள அரசு, புதிய அணை கட்ட திட்டமிட்டுள்ளது. அதற்காக, புலிகள் சரணாலய வனப்பகுதியில் நிலம் வழங்க கோரி வருகிறது. இதுகுறித்து ஆராய மத்திய அரசு நியமிக்க உள்ள மூன்று பேர் கொண்ட சுற்றுச்சூழல் குழு, நேரில் அப்பகுதியை ஆய்வு செய்யும். அங்கு புதிய அணைக்கட்டுவதற்கு வனப் பகுதியை மாநில அரசுக்கு அளிக்கலாமா என்பது குறித்து, அக்குழு தான் முடிவு செய்யும். அதன்பின் அக்குழு, மத்திய அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யும். இவ்வாறு ராஜேஷ் கோபால் கூறினார்.
                   தமிழக அரசு, "இங்கு புதிய அணை கட்டக் கூடாது' எனக் கூறி, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்நிலையில், அப்பகுதியில் சுற்றுச்சூழல், அங்கு பாதுகாக்கப்படும் புலிகள், வன விலங்குகள் ஆகியவற்றுக்குப் பாதிப்பு போன்ற, பல்வேறு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு கமிட்டி அமைக்கவுள்ளது, தமிழக விவசாயிகளுக்கு ஆறுதலை தந்துள்ளது.

Thursday, January 13, 2011

பொங்கல் வைப்பது எப்படி? பொங்கல் ஸ்பெஷல்



                                                                          நாளை பொங்கல் திருவிழா. கண்கண்ட தெய்வமான கதிரவனுக்கு, இந்நாளில் முறைப்படி பொங்கலிட்டால் அவரது நல்லருளைப் பெறலாம்.

                                                           பொங்கலை வீட்டு வாசலில் வைப்பதே சிறப்பாகும். ஒரு கோலமிட்ட பலகையை வீட்டு வாசலில் வைத்து அதன் மேல் திருவிளக்கை வையுங்கள். பூ சூட்டுங்கள். வெளியே காற்றடிக்கலாம் என்பதால் விளக்கு ஏற்ற வேண்டும் என்ற அவசியமில்லை. நிறை விளக்காக வைத்தால் போதும். விளக்கின் முன் பெரிய வாழை இலையை விரித்து, முதலில் சாணப்பிள்ளையாரை ஒரு ஓரமாகவும், செம்மண்ணைப் பிடித்து அம்பாளாகக் கருதி பிள்ளையார் அருகிலும் வையுங்கள். இலையில் பச்சரிசி பரப்புங்கள். பிறகு, கிழங்கு, காய்கறிவகைகள், வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு படைக்கவேண்டும். இரண்டு கரும்புகளை தோகையுடன் சுவரில் சாய்த்து வையுங்கள். பச்சரிசி, வெல்லம், பழம், தேங்காய்ப்பல் சேர்த்து தயாரிக்கும் காப்பரிசியை ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

பச்சரிசி களைந்த நீரை தயாராக வைத்துக் கொள்ளவும். பானையில் மஞ்சள் குலை கட்டி அடுப்பில் வையுங்கள். ஒரு தேங்காயை உடைத்து அதிலுள்ள தண்ணீரை பானையில் விடுங்கள். சூடம் ஏற்றி அடுப்பு பற்ற வையுங்கள். பனை அல்லது தென்னை ஓலை கிடைத்தால் அதைக் கொண்டு அடுப்பு எரிக்கலாம். கிடைக்காதவர்கள் சுள்ளி விறகுகளைப் பயன்படுத்தலாம். கூடுமானவரை மண்ணெண்ணெய் விட்டு அடுப்பு பற்ற வைப்பதைத் தவிர்க்கவும். காய்ந்த விறகுகளைத் தேர்ந்தெடுங்கள். பச்சரிசி களைந்த நீரை பானையில் ஊற்றவும். தேவையானால், சிறிதளவு பசும்பால் சேர்க்கலாம். தண்ணீர் கொதித்து பொங்கியஉடன், குலவையிடுங்கள். குலவை தெரியாதவர்கள் "பொங்கலோ பொங்கல்' என்று முழங்கலாம். கொதித்த தண்ணீரை, எவ்வளவு அரிசி சமைக்க இருக்கிறோமோ அந்தளவுக்கு முகர்ந்து எடுத்து விட்டு பச்சரிசியை இடுங்கள். நேரம் செல்லச் செல்ல எரிபொருளின் அளவைக் குறைத்து விடுவது அவசியம். இல்லாவிட்டால், சாதம் பானையில் பிடிக்கும்.

                               பொங்கல் தயாரானதும் இறக்கி விடுங்கள். பின்பு, அதே அடுப்பில் சர்க்கரைப் பொங்கல் தயார் செய்து விடுங்கள்.பொங்கல் பானைகளை விளக்கின் முன் வைத்து, பூஜை செய்யுங்கள். சூரியனுக்குரிய ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரம், பிற ஸ்லோகங்கள், பாடல்களைப் பாடுங்கள். பின்னர், இவற்றை வீட்டுக்குள் எடுத்துச் சென்று விடலாம். முதலில், பொங்கல், பழம் ஆகியவற்றை ஒரு இலையில் வைத்து காகத்துக்கு வைக்க வேண்டும். மதிய வேளையில், காய்கறி சமைத்ததும், திருவிளக்கேற்றி, ஒரு இலை விரித்து பொங்கல், சர்க்கரைப் பொங்கல், காய்கறி வகைகளை இலையில் வைக்க வேண்டும். அதை முன்னோருக்கு சமர்ப்பித்து பூஜை செய்ய வேண்டும். அவர்களின் ஆசியைப் பெற்ற பிறகு, இதன்பிறகு, குடும்பத்தார் ஒன்றாக அமர்ந்து பொங்கல் சாப்பிட வேண்டும். வெறுமனே "டிவி' பார்ப்பது மட்டும் பொங்கலன்று செய்யும் பணியல்ல. இப்படி, பொங்கலிட்டு பாருங்கள். சூரியதேவனின் அருள்பெற்று நலமுடன் வாழ்வீர்கள்.

Monday, January 10, 2011

கீதை தரும் பாதை




அர்ஜுனன் கிருஷ்ணனின் மைத்துனன். உறவினர்கள் மட்டுமல்ல! உயிர் நண்பர்களும் கூட. குரு÷க்ஷத்திர யுத்தம் உக்கிரமாக நடந்து கொண்டிருந்த வேளை! போர்க்களத்தில் கேள்வி கேட்பதற்கோ, விரிவான விளக்கம் அளிப்பதற்கோ நேரமே இல்லை என்ற நிலை! இருந்தாலும் மைத்துனனின் மனசஞ்சலத்தைப் போக்க பகவான் கிருஷ்ணர் கீதையைப் போதித்து வெற்றி தேடி தந்தார். தன்னுடைய தெய்வீக ஆற்றலைப் பயன்படுத்தியிருந்தால், கீதோபதேசம் இல்லாமலே அர்ஜுனனை மாற்றியிருக்கலாம். மாறாக, அவனது கவலையை மாற்றும் மருந்தை கீதை மூலமாகப் புகட்டினார். ""அர்ஜுனா! நீ என் மைத்துனன் உறவு மட்டுமல்ல! நல்ல நண்பனுமாக இருக்கிறாய்! நான் உனக்குத் தேரோட்டும் அளவுக்கு நெருக்கமாக இருக்கிறேன். இருந்தாலும் உன்னிடம் இருக்கும் அஞ்ஞானத்தால், போர் புரியாமல் காண்டீபத்தை (வில்) கீழே போட்டுவிட்டு மனம் வருந்துகிறாய். அஞ்ஞானத்தை உன் முயற்சியாலே போக்கவேண்டும். அப்போது கிடைக்கும் சத்தியஞானம் தான் நிரந்தர பொக்கிஷம். இது கிடைத்தால் மனவலிமையும், உடல் சக்தியும் உண்டாகும். புரட்சிகரமான நல்ல மாறுதல் உண்டாகும்,'' என்றார். உடனே அர்ஜுனன் வில்லை எடுத்தான். எதிரிகளைச் சாய்த்தான். நீங்களும் மனசஞ்சலமான நேரத்தில் கீதையைப் படியுங்கள். வாழ்க்கை என்றால் என்ன என்பதை உணர்வீர்கள். தைரியம் தானாகவே வரும். செயல்பாடுகளும் சிறப்பாக அமையும்.